Star18. பிச்சை, திருட்டு பின் ஒரு நோபல் பரிசு!
உடற்கூறு ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்துக்கான 2007-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்ற மூவரில் ஒருவரான, 1937-இல் இத்தாலியில் பிறந்த மரியோ கெபெச்சி (Mario Capecchi) அமெரிக்காவின் உடா (UTAH) பல்கலைக்கழகத்துப் பேராசிரியர். மற்ற இருவர், மார்டின் ஈவான்ஸ், ஆலிவர் ஸ்மிதிஸ். பரிசுத் தொகை $1.54 மில்லியன். Embryonic ஸ்டெம் செல்களை பயன்படுத்துவதன் மூலம், வெள்ளெலிகளின் குறிப்பிட்ட மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்த வல்ல கோட்பாடுகளை கண்டுபிடித்ததற்காக இம்மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மரியோ கெபெச்சி குறித்து சில சுவாரசியமான விஷயங்களை சொல்லி விட்டு, டெக்னிகல் சமாச்சாரத்துக்கு வருகிறேன்!
**************************
இரண்டாம் உலகப்போரின் போது, தனது நாலரை வயதில் தாயைப் பிரிந்த (அவரது தாய் கெஸ்டபோ போலீசாரால் கைது செய்யப்பட்டார்) மரியோ கெபெச்சி, அந்த சிறு வயதில் பிச்சை எடுத்திருக்கிறார், சாப்பாட்டுக்காக திருடியும் இருக்கிறார்! ஒரு சமயம் உடம்பு மோசமாகி, ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கெபெச்சி தப்பி ஓடாமல் இருப்பதற்காக, செவிலி ஒருத்தி கெபெச்சியை நிர்வாணமாக படுக்கையில் படுக்க வைத்திருக்க வேண்டியிருந்தது!
இரண்டாம் உலகப்போர் முடிந்து, கெப்பெச்சியின் தாய் சிறையிலிருந்து வெளிவந்து ஓராண்டு தனது மகனைத் தேடிக் கண்டுபிடித்தபோது, கெபெச்சிக்கு வயது ஒன்பது. தனது அன்னையுடன் (தனது உறவினருடன் சேர்ந்து வாழ) அமெரிக்காவுக்கு கப்பற் பிரயாணம் மேற்கொண்டார். முதன்முதலில் அமெரிக்கா சென்றபோது, அவருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது! அமெரிக்க சென்ற பிறகு, கெபெச்சி பின்னோக்கிப் பார்க்கவில்லை!
ஒரு அரை மணி நேரத்தில் ஒரு மொழியின் அடிப்படையை புரிந்து கொள்ளும் வல்லமை பெற்ற அவரது தாயார் அமெரிக்காவில் 15 மொழிகள் பேசக் கற்றுக் கொண்டார்! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?
1980-இல், தனது மரபணு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிக்கு பொருளுதவி கேட்டு இவர் கொடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மனம் தளராத கெபெச்சி, தன் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு மறுவடிவம் கொடுத்து, 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் விண்ணப்பித்தார். இம்முறை விண்ணப்பம் ஏற்கப்பட்டு பொருளுதவி கிட்டியது.
*********************
நோபல் பரிசு பெற்ற தொழில் நுட்பம் 'மரபணு குறி வைத்தல்' (Gene Targeting) எனப்படுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட மரபணுக்களை செயலிழக்க வைக்க முடிகிறது. ஒரு வெள்ளெலியின் குறிப்பிட்ட மரபணுக்களை செயலிழக்க வைப்பதன் (knock out) மூலம், அதன் DNA கட்டுமானத்தில் மாற்றத்தை கொண்டு வந்து, ஒரு நோய்க்கு குறிப்பிட்ட மரபணுக்களின் பங்கை நிறுவுவதற்கு ஏதுவாகிறது. இவர்களின் ஆராய்ச்சியின் விளைவாக, 500-க்கும் மேற்பட்ட (ஒரு குறிப்பிட்ட நோய் அல்லது உபாதை தொடர்பான மரபணுக் கூறுகளை உடைய) உயிருள்ள வெள்ளெலி மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மனித மற்றும் வெள்ளெலியின் மரபணுக்களில் பெருமளவு ஒற்றுமை இருக்கின்றன. இந்த வெள்ளெலி மாடல்களின் குணாதிசயங்களை (characteristics) வைத்து, ஆராய்ச்சியாளர்கள் சேகரிக்கும் தகவல்கள், பலவகை மனித நோய்கள் மற்றும் தன்மைகளுக்கு (புற்று நோய், இதய நோய், நீரிழவு நோய், மூட்டு வலி, மூப்பு, உடல் பருமன், மனச்சிதைவு, போதைக்கு அடிமையாதல், நரம்புத் தளர்ச்சி நோய் போன்ற) எவ்விதம் மரபணுக்கள் காரணமாக அமையக்கூடும் என்பதை புரிந்து கொள்ளவும், அவை வராமல் தடுக்கவும், மிக உதவியாக இருக்கும். அது போலவே, சிசுவின் உடற்கூறு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளில் (abnormalities) மரபணுக்களின் பங்கை புரிந்து கொள்ளவும், இந்த 'ஜீன் டார்கெட்டிங்' உதவுகிறது.
என்றென்றும் அன்புடன்
பாலா
7 மறுமொழிகள்:
test comment
good post ....
//shravan said...
good post ....
//
Thanks !
நன்றாக இருந்தது. நன்றி
//ஒரு வெள்ளெலியின் குறிப்பிட்ட மரபணுக்களை செயலிழக்க வைப்பதன் (knock out) மூலம், அதன் DNA கட்டுமானத்தில் மாற்றத்தை கொண்டு வந்து, ஒரு நோய்க்கு குறிப்பிட்ட மரபணுக்களின் பங்கை நிறுவுவதற்கு ஏதுவாகிறது.//
இந்த "knock out dose" என்பதை எப்படி சொல்லியுள்ளீர்கள் என்பது தெரியவில்லை, சாதாரணமாக ஒரு பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கிறார்கள் எனில் அதை ஒரு மனிதன் எவ்வளவு சாப்பீட்டால் இறப்பான் என்பதை தான் "knock out dose or leathal dose" என்பார்கள். எல்லாப்பூச்சி மருந்து பாக்கெட்டின் மீதும் L.D, or knock out dose percentage என போட்டு இருக்க வேண்டும்.இந்த knocke out dose என்பது , ஒரு வர்த்தக பூச்சிக்கொல்லியில் உள்ள "active ingredinet " எனப்படும் ரசாயனத்தை பொருத்தது.உதாரணமாக சிலப்பூச்சிக்கொல்லிகளில் பார்த்தால் , பூச்சிக்க்கொல்லி மருந்தின் உறையில் பார்த்தால் L.D= a.i=20% எனப்போட்டு இருக்கும். இங்கே பூச்சி மருந்து என்பது கொசு வர்த்தி முதல் , பலதும் அடங்கும், ஆனால் நீங்கள் ஜின் பற்றி அப்படி சொல்லி இருப்பதால் புரியவில்லை, விளக்கினால் தேவலை!
வவ்வால்,
வருகைக்கு நன்றி.
குறிப்பிட்ட மரபணுக்களை செயலிழக்க வைப்பதை, அந்த விஞ்ஞானிகள் "நாக் அவுட்" என்றே குறிப்பிடுகிறார்கள். ஒரு process of elimination வாயிலாக, குறிப்பிட்ட நோய்க்கு காரணமான தன்மைகளை தன்னுள் கொண்டு, அதை அடுத்த தலைமுறைக்கும் இட்டுச் செல்லும் ஜீன்களை அடையாளம் காண முடிகிறது. அந்த ஜீன்களை சரிக்கட்டுவது அடுத்த இலக்கு ! இந்த ஆராய்ச்சி (மனித அளவில்) ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. இதற்கு மேல் கேட்டால் நான் அம்பேல் :)
தங்களுக்கு கூகிள் ஆண்டவரின் கடாட்சம் கிடைக்கப் பெற்று, இது குறித்து மேலதிக தகவல்கள் கிட்டினால், அவற்றை பகிர்ந்து கொண்டால் நான் தன்யானாவேன் :)
எ.அ.பாலா
அழகான பதிவுன்னு சொல்லலாம்னு வந்தா நீங்களும் வவ்வாலாரும் பேசிக் கொள்வதைப் பார்த்தால் பெரியவங்க பேச்சுல நான் குறுக்கிட விரும்பவில்லை.
Post a Comment